TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
மாய உலகத்தில் ஒரு பிரவேசம் கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
அழுது கொண்டிருந்தான் அஸ்வின். அப்பா அடித்துவிட்டார். அம்மா திட்டிவிட்டாள். வாங்கியதோ குறைந்த மதிப்பெண், ஆனால் அதைத் திருத்தி அதிகமென ஆக்கியதை கண்டுபிடித்துவிட்டார்கள். அவ்வப்போது சின்னச் சின்ன தவறுகள் செய்வான் தான். சிறிது நேரத்தில் அவற்றை மன்னித்து விடுவார்கள். ஆனால் இந்த தவறுக்கு அவனை வெளுத்து விட்டார்கள்.
அழுதபடியே கட்டிலுக்கு கீழே படுத்திருந்தான். கொஞ்சம் பெரிய கட்டில். நேரமாக நேரமாக கட்டிலுக்கு கீழேயிருந்த இருள் கண்களுக்குப் பழகிவிட்டது. தேம்பல் நின்றது. சாப்பாடு நேரம் கடந்தது. ஆனால் இவனை யாரும் தேடவில்லை. கோபமாய் படுத்திருந்தான். கட்டிலுக்கு கீழே உருண்டபடியே சுவற்றின் ஓரத்திற்குச் சென்றான்.
சென்றவன் கைகளில் எதோ சின்ன கைப்பிடி போல தட்டுப்பட்டது. அதில் கையை வைத்தவன் விளையாட்டாக திருக ஆரம்பித்தான். அந்தக் கைப்பிடியும் இவன் சுற்றச் சுற்ற.. மறுப்பேதும் சொல்லாமல் சுற்ற ஆரம்பித்தது.
இரண்டு சுற்று தான் சுற்றியிருப்பான்.. இருளாய் இருந்த கட்டிலடி இப்போது சிறிது வெளிச்சத்திற்கு வந்ததைப் போல உணர்ந்தவன்.. கண்களை நன்றாகத் திறந்து பார்க்க.. அந்த கைப்பிடியின் அருகில்.. ஒரு சிறிய இடைவெளி தோன்றி இருந்தது. கைப்பிடியை மேலும் மேலும் திருக.. இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது.
சிறிது நேரத்தில் நன்றாக இடைவெளி வந்துவிட வெளிச்சமும் முழுதாக உள்ளேயிருந்து வந்தது. ஆச்சரியம் அடைந்தவன் மெல்ல அந்த இடைவெளிக்குள் படுத்தபடியே சென்றான். உடனே ஒரு சிறிய பள்ளம் வர.. உள்ளே குதித்தான். அவன் முன்னே ஒரு பாதை தென்பட்டது.
‘இது என்ன கட்டிலுக்கு கீழே எதாவது சுரங்கமா..!’
‘இதுல போலாமா வேணாமா..!’ திரும்பி தான் இறங்கிய வழியைப் பார்த்தான். எளிதாக ஏறிவிடலாம் போலத்தான் தோன்றியது. அந்தப்பாதையின் சிறிது தூரத்தில் ஒரு சிறிய தோட்டம் காணப்பட்டது. அதன் நுழைவாயிலே அரண்மனை முகப்பு போல இருந்தது.
இவனுக்கு பிடி கொள்ளவில்லை. உடனே போய்விடலாம் என வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான். தூரத்தில் ஒரு நதியின் ஓசை கேட்டது. பலவித பறவைகள் எழுப்பும் ஒலிகளும் கேட்டது. மெல்லிய தென்றலும் அங்கே உலவிக் கொண்டிருக்க.. ‘இது என்ன புதுசா இருக்கு.. இதப்பத்தி நம்ம வீட்டுல யாருக்காவது தெரியுமா.. தெரியாதா..’ என யோசித்தவனின் வயிறு இப்போது அனத்தத் தொடங்கியது.
பசி.. பசி.. பசி..
ஆகா.. இப்பப் போயி இப்படிப் பசிக்குதே..! இங்க நான் யார்கிட்ட போய் சாப்பாடு கேட்க.. என அஸ்வின் நினைத்த மறு நொடி.. இரண்டு மூன்று வித்தியாசமான உருவங்கள் அவன் முன் தோன்றின..
மூன்று அடிகளே கொண்ட விசித்திர உருவங்கள்.
Tags: அ.வேளாங்கண்ணி